எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

நல்லதோர் வீணை செய்தே ..



நல்லதோர் வீணை செய்தே ..

சுதந்திரம் என்னும் சுந்தர வீணையைச்
சுகமாய்ப் பெற்றுள்ள நாம்
சுவைத்து மகிழ்கின்ற நாம் அதனைச்
சுருதி சுத்தமாய் மீட்டத் தெரியாத மடையர்கள்.

வீணையின் அருமையுணர்ந்த அரும்பெரும்
வீரர்கள் தீரம் பல புரிந்து திரட்டி வைத்த பொக்கிஷத்தை
வீணர்கள் கையிலிட்டால் என்னவாகும் ?
வீணாய் அனைத்துமே சிதைந்து போகும்.

அடிமைப்பட்டே பழக்கப்பட்ட நமக்கு
அரசபதவியைத் தூக்கிக் கொடுப்பதுபோல்
சுதந்திர வீணையைப் பெற்றுத் தந்தால்
அது குரங்கு கையில் பூமாலை.

என்று தீருமென் சுதந்திர தாகமென
எண்ணி உளம் மருகி உடலுருகி
எதிர்த்துப் போராடி இன்னல்கள் பல பெற்று
எட்டாக் கிளையிலிருக்கும் தீஞ்சுவை மாங்கனியை
எட்டிப் பறிக்கும் வேளையிலே ஏட்டிலே காவியமாகிவிட்டனர்
எண்ணற்ற துடிப்புமிக்க இளைஞரும் முதியோரும்.

விடுதலை வேள்வியில்
வெந்துபோன இதயங்களை
விடுதலை பெற்றபின்
மறந்திட்டோம் !
மறுத்திட்டோம்.!!

அந்த அன்பு இதயங்கள் இன்று நம்
அருகில் இருந்தால் இந்த விடுதலைக்கா
இப்படிப் பாடுபட்டோமென
இதயம் நொந்துபோய்
இரத்தக்கண்ணீர் வடித்திருக்கும்.

இந்த அன்புத் தெய்வங்கள்
இன்று நம் அருகிலில்லை.

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி சிவசக்தி.. !!!
 -- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...