எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 ஜூன், 2015

சல்லடைகள் :-



சல்லடைகள் :-

வார்த்தை சலித்துப் போடும்
வாய்ச்சல்லடைகள்

வார்த்தையைக் குதப்பி
வெற்றிலைச் சாறாய்
முகத்தில் உமிழும்
ஓட்டைச் சல்லடைகள்

அன்பு மழையை
வழித்து போட்டுப் போகும்
வாய்க்குடைகள்

வாமனமாய் இருந்துகொண்டு
விசுவரூபம் காட்டும்

தங்கள் அசுத்தத்தை
அலங்கார வார்தைகளால்
போர்த்திக் கொள்ளும் வாய்கள்

பற்கள் கோரையாய் இருந்தாலும்
சிரிப்புதிர்க்கும்.

உள்ளே
உள்ளத்தைக் கொத்திவிட்டுப்
புரண்டு படுக்கும் நாவு.

மர நரம்புகளுக்கு
அலங்கார இலைத்தோல்கள்போல்
உள்ளக்கசடுகளை உதடு மூடும்

உதட்டு முகம் பார்த்து
மயங்கக் கூடாது
உள்ளே இருப்பது
நாநாகம்.

மனப்பூவை நுகர முற்பட்டால்
நா நாகம் எதிர்ப்படும்.

வார்த்தை சலித்துபோடும்
சல்லடைக்காரர்கள்.

நீண்ட கருங்கூந்தலாய்
இருந்துகொண்டு உள்ளே
ஈறும் பேனுமாய்ப் புரளும்நாவு.

நாவுச் செருப்பு இல்லாமல்
நடக்கத் தெரியாத மனிதர்கள்

நானும் இருக்கிறேன் என
அடிக்கடி சத்தமிடும்
பல்லியாய் நாவு.

உள்ளே பொறாமைகள்
புற்றுக்கட்டி வார்த்தை எறும்புகள்
சுறுசுறுப்பாய்க் கடிக்கும்.

வார்த்தைகளை வாந்தி எடுக்கமட்டுமே
தெரிந்த வாய்கள்

புத்தகத்தில் புரளும்
கறுப்பு எழுத்துக்களாய்
நாவில் வார்த்தைகள்

வெய்யிலாய்க் கொட்டிவிட்டு
வாய் உதட்டுமூடி மாட்டும்.

போலியாய்ப் புன்னகைக்கவும்
போலியாய்ப் பாராட்டவும்
பழகிக் கொடுக்கும்
சதங்கை முத்திலுள்ள காற்றைப் போல.

-- 85 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எத்தனை உண்மைகள்...!

Manokala சொன்னது…

நாகம் பரவாயில்லை சீண்டினால்தான் கொத்தும்.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் டிடி சகோ

ஆம் மனோகலா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...