எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஜனவரி, 2015

நட்பு



ஸ்நேகத்தை உதறிவிட்டு
எங்கே ஓடப் பார்க்கிறாய் நீ ?

இதென்ன லாலா கடை அல்வாவா
திகட்டியதும் முகத்தைச் சுளிக்க

எங்கேபோய்ப் பதுங்கிக் கொள்வாய்
எங்கே புதைந்து கொள்வாய்

எந்தக் கிணற்றின் இருட்டோரங்களில்
சுவரின் கருமைச் சரிவுகளில்
கட்டிடங்களின் ஆணிவேர்களில்
புத்தகங்களின் உடல்களில்
மேகமெத்தைகளில்
கவிதைச் சுரங்கங்களில்
பூப்பள்ளத்தாக்குகளில்
ஆகாச மலை வீடுகளில்
வறுமையின் ஈரங்களில்
கண்ணீர் அடிவாரங்களில்
சமுதாய அழுக்குகளில்
புதைந்து கொள்வாய்
உன்னைப் புதைத்துக் கொள்வாய்

செல்லுபடியான வினாத்தாள்களாய்
ஆனபின்னும் அந்த வினாக்கள்
இன்னும் உன்னுள் பூத்து நிற்பதேன்

இவ்வளவு வந்தபின்னும்
உன்னால் வெறுக்கமுடிந்தது என்றால்
இதென்ன நாயர்கடையின்
பூந்திப் பொட்டலமா
சவுத்துப் போக

இதென்ன ஒரு நாளில்
உயிர்த்துப் பறந்து அலைமோதி
இறக்கும் புற்றீசலின் வாழ்வா.

இதென்ன துளிர்த்துப் பருவமெய்திக்
கிழடுதட்டிப் பழுத்து
உதிரும் இலையா

இதென்ன நாலாந்தர புத்தகமா
இரண்டு பக்கம் படித்ததும்
பிடிக்காதெனத் தூக்கி எறிய

இதென்ன மரங்களின் பட்டையா
மரம் வளர வளர
உதிர்ந்து கொள்ள

இது அதனுள்ளே
உருகிக் கசிந்து
வடியும் கோந்து

இது மழைக்கால மாலையில்
வர்ணங்கள் நட்புடன்
சேர்த்தமைத்த வானவில்

இது வாலைத் தூக்கிக்
கீச் கீச்சென்று கத்தி
மனதின் மூலையில்
உருட்டி விழித்து அமரும்
அணில் குஞ்சு

இது மாலை நேரத்தில்
அசைபோட்டுக்கொண்டு
வயல் வரப்பில் ஒய்யாரமிடும்
கட்டை வண்டி

இது அரும்பு விட்டு மலர்ந்து
காய்த்துக் கனிந்து
கையில் வரும் பழம்.

இது மத்யான வெய்யிலில்
முழங்கால் தண்ணீரில்
நின்றுகொண்டு நாற்றுநடும்
பெண்களின் குரலுயர்ந்த பாட்டு.

இது முகத்தைத் தடவிக்
குசலம் விசாரிக்கும்
அதிவிடியற்காலத்துப் பனிக்காற்று,

இது மார்கழி மாதத்தில்
காதை வருடம் திருப்பாவை
கண்ணை நிறைக்கும் மாக்கோலம்.

புதைமணலில் சேற்றுக்குள்
விரும்பிப் போய்ப் புதையாதே
உன் புதையலுக்குக் காரணம் நீயே
என்னால் தடுக்க தூக்கிவிட முடியாது.
ஏழுமாதங்களுக்குள்
எவ்வளவுக்கு முடியுமோ
அவ்வளவுக்குக் கோபப்பட்டுவிடு.
பின் கோபிக்க யாரிருக்கப்
போகின்றார்கள்..? ஊம்.!

-- மீனாவுக்காக. :)

-- நவம்பர் 84 ஆம் வருட டைரி :)

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசனை அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...